திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.68 திருநள்ளாறு - திருக்குறுந்தொகை
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே.
1
ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.
2
மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.
3
மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.
4
உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.
5
செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரமருள் செய்த சதுரரே.
6
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.
7
அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே.
8
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.
9
இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றாநள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com